நல்ல விஷயங்களை கற்றுக் கொடுங்கள்


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் "குத்பா' உரையாற்றினார்கள். அதில் சில முஸ்லிம்களைப் புகழ்ந்தார்கள். பிறகு கூறினார்கள்:
""சிலர் தம் அண்டை வீட்டாருக்கு மார்க்க அறிவைக் கற்பிப்பதில்லை. அவர்களுக்கு மார்க்க போதனையும் புரிவதில்லை. மார்க்கத்தை அறியாதிருப்பதால் விளையும் தீய விளைவுகளை எடுத்துச் சொல்வதுமில்லை; அவர்களைத் தீய செயல்களை விட்டுத் தடுப்பதுமில்லை. ஏன் இந்த நிலை?
சிலர் தம் அண்டை வீட்டாரிடமிருந்து மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதில்லை; மார்க்க அறிவை நம்முள் உண்டாக்கிக் கொள்வதுமில்லை; மார்க்கத்தை அறியாதிருப்பதால் ஏற்படும் தீயவிளைவுகளை அறிந்து கொள்வதுமில்லை. ஏன் இந்த நிலை?
இறைவன் மீது ஆணையாக! மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் மார்க்கத்தைப் போதிக்க வேண்டும். அவர்களுக்கு அறிவுரைகள் கூற வேண்டும். நல்ல விஷயங்களை எடுத்துரைக்க வேண்டும். தீயவற்றிலிருந்து தடுக்க வேண்டும். மேலும் மக்கள் தம் அண்டை வீட்டாரிடமிருந்து மார்க்கத்தைக் கற்க வேண்டும். அவர் களுடைய அறிவுரைகளை ஏற்க வேண்டும். இல்லையென் றால் நான் அவர்களுக்கு வெகு விரைவில் தண்டனை அளிப்பேன்.''
இந்த உரையின் செய்தி அஷ்அரீ குலத்தாருக்கு எட்டியவுடன் அவர்கள் அண்ணலாரிடம் வந்தனர். ""அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தங்கள் உரையில் சிலரைப் புகழ்ந்தீர்கள். எங்கள் மீது கோபப்பட்டீர்கள். நாங்கள் என்ன தவறிழைத்தோம்?'' என்று கேட்டார்கள். அண்ணலார் கூறினார்கள்: ""மக்கள் தம் அண்டை வீட்டாருக்கு அவசியம் மார்க்க அறிவைப் புகட்ட வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். நற்செயல்கள் புரியும் படி அவர்களை ஏவுதல் வேண்டும். தீய விஷயங்களை விட்டுத் தடுக்க வேண்டும். இவ்வாறே மக்கள் தம் அண்டை வீட்டாரிடமிருந்து மார்க்கத்தைக் கற்க வேண்டும். அவர்களுடைய அறிவுரையை ஏற்க வேண்டும். நமக்குள் மார்க்க அறிவை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நான் அவர்களுக்கு வெகு விரைவில் இவ்வுலகிலேயே தண்டனை அளிப்பேன்.''
அதற்கு அஷ்அரீ குலத்தார் கூறினார்கள்: ""அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பிறருக் குள்ளும் மார்க்க அறிவை உண்டாக்க வேண்டுமா?'' (அறிவுரை புரிவதும், அழைப்புப் பணி செய்வதும் எங்கள் கடமையா?) என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார், ""ஆம்; இதுவும் உங்கள் பொறுப்பேயாகும்,'' என்று நவின்றார்கள். உடனே, அம்மக்கள் ""எங்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள்'' என்று கூறினார்கள். ஒராண்டுக்குள் அவர்கள் தம் அண்டைச் சமுதாயத்தவருக்கு மார்க்க அறிவை உண்டாக்கிட வேண்டும். மார்க்க சட்டங்களைப் போதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையுடன் ஓராண்டுக்கால அவகாசத்தை அவர்களுக்கு அண்ணலார் அளித்தார்கள். இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லஇன்னல்லஸீன கஃபரூமின் பனீஇஸ்ராயீல'' என்று தொடங்கும் இறைவசனத்தை ஓதினார்கள்.
ஐந்தாவது அத்தியாயமான அல்மாயிதாவிலுள்ள அந்த வசனத்தின் பொருளாவது: ""இஸணராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மரியத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். மேலும் இறை வரம்புகளை மீறிய வண்ணம் இருந்தார்கள். தாம் செய்து கொண்டிருந்த தீய செயலில் இருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன.''(5:78) (தப்ரானீ)
-அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து

ஆடை விஷயத்தில் கவனம்


அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)
நான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவிலக் கேட்டேன்: ""இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி: கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை(இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவம் தெளிவாகி விடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்றுமுறை கூறினார்கள். பிறகு ""அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்த வண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமைநாளில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்'' என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
""எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன்
பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமைநாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (கருணைப் பார்வை பார்க்க மாட்டான்)''
அபூபக்கர் ஸித்தீக்(ரலி) அவர்கள் வினவினார்கள்:
""நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனோ?)'' அதற்கு அண்ணலார், ""இல்லை; நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். (எனவே, இறைவனின் அருட்பார்வையை நீர் இழக்க மாட்டீர்)'' என்று பதிலளித்தார்கள்.
(புகாரி)
விளக்கம்: அபூபக்கர் ஸித்தீக்(ரலி) அவர்கள் வேட்டி தளர்ந்து போனதற்கு காரணம் அவர்களுக்குத் தொப்பை போட்டிருந்தது என்பதன்று. மாறாக அவர்கள் ஒல்லியாக இருந்தது தான் இதற்குக் காரணம். ""கர்வத்தினாலும் பெருமையுணர்வினாலும் கணுக்கால்களை மறைக்கும் வண்ணம் வேட்டியணிந்து நடப்பவனே இறைவனின் கருணைப்பார்வையை இழந்து விடுவான்'' என்றுதான் அண்ணலார் நவின்றார்கள். இந்த அருள்மொழி முழுவதையும் அபூபக்கர்(ரலி) அவர்கள் செவியுற்றார்கள். தற்பெருமையினால் வேண்டுமென்றே தாம் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். ஆயினும், ஒரு மனிதனை மறுமை பற்றிய கவலை கவ்விக் கொள்ளும்போது, பாவத்தின் நிழல்களைக் கண்டாலும் கூட அவற்றை விட்டு அவர் விலகி ஓடுகிறார்.
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)

இங்கிதம் வேண்டும்

மனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார் உறவினரிடமும், உற்ற நண்பர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக முக்கியமானது 'இங்கிதம்'.
நமது பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால், நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். கிடைத்த நட்பு நிலைத்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும். உறவுகள் பலப்படும். உயர் அதிகாரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத 'ராசிபலன்' வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவித்த உண்மைகள்.
அலுவலகம் ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயிலில், 'உத்திரவின்றி உள்ளே வரக் கூடாது' என எழுதி வைக்கப் பட்டிருந்தது. அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும் படியும், அதற்குப் பதிலாக 'உத்திரவு பெற்று உள்ளே வரவும்' என எழுதி வைக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.இரு வாசகங்களின் கருத்தும் ஒன்று தான். முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இரண்டாம் வாசகத்தின் நேர்மறை அணுகுமுறை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே!.
ஒருவரைச் சந்திக்க நாம் செல்வதாக இருந்தால், அதுவும் ஏதேனும் ஒரு வகையில் அவர் நம்மை விட உயர்ந்தவராக இருந்தால், நமக்கு வசதிப்பட்ட நேரத்தில நாம் செல்லக் கூடாது. 'எந்த நேரத்தில் வந்தால் தங்களைச் சந்திக்கலாம்?' என்று அவரிடம் முன் கூட்டியே கேட்டறிந்து, நம்மால் அவருடைய வழக்கமான அலுவல்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணமும், அவருக்கு வசதிப்பட்ட நேரத்திலும் சந்திப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பு உண்டாகும். நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாகும்.
பொதுவாக உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு நாம் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்ல நேர்ந்தால், நமது வருகையை முன் கூட்டியே அவர்களுக்குத் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். சர்வ சாதாரணமாகத் தொலைபேசி உபயோகம் வந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் எளிது. தொலைபேசி வசதி இல்லாத இடங்களுக்கு கடிதம் மூலமாகவேனும் தெரிவித்து விட்டுச் செல்லவேண்டும். முன் அறிவிப்பின்றி திடீரெனப் போய்ச் சேருவது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் அவர்கள் தம் சொந்த வேலையாக வெளியில் செல்லத் திட்டமிட்டிருக்கலாம். எதிர் பாரா விதமாக திடீரென நாம் போய் நிற்கும் போது அவர்களின் அவசியமான அலுவல்கள் திட்டங்கள் பாதிக்கப் படலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் நற்குணம் கொண்டவர்களைக் கூட இது போன்ற திடீர் வருகை சில சமயம் எரிச்சல் படவைக்கும்.
தம் வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு படுத்தியும் வைத்திருப்பதைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக் குழந்தைகள் உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கும். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன் அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு தர்ம சங்கடத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த வீட்டுக்குச் சென்றாலும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும் ஓர் இங்கிதம்.
எந்த வீட்டுக்குச் சென்றாலும் வீட்டாரின் அனுமதி கிடைத்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். உள்ளே இருப்பவரோ அல்லது வெளியிலிருந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்பவரோ 'உள்ளே வாருங்கள்' என்று அழைக்கும் வரை நாமாக அவசரப்பட்டுச் செல்லக் கூடாது. நமது சொந்த வீட்டைத் தவிர வேறு எவர் வீட்டிலும் அவர் எவ்வளவு தான் நெருங்கிய உறவினராகவோ நண்பராகவோ இருப்பினும் அவர்கள் வீட்டில முழு உரிமை எடுத்துக் கொண்டு சமையலறை வரை சர்வ சாதாரணமாகச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
விருந்தினராக அடுத்தவர் வீட்டுக்குச் சென்றால் வீட்டுக் காரர்களே சலிப்படையும் அளவுக்குத் தங்குவது கூடாது. முதல் நாள் உபசரிப்பு தடபுடலாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் வித்தியாசத்தை நாமே உணரலாம். எனவே பலமான உபசரிப்பு முடிந்ததுமே கௌரவமாக விடை பெற்றுக் கொள்ள வேண்டும். 'விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான்' என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?
விருந்தினராக அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பின் நம்மால் இயன்ற அன்பளிப்புப் பொருட்களை, குறிப்பாக இனிப்புப் பண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். ஒன்றுமே வாங்கமல் வெறுங்கையுடன் எப்போதும் ஒரு வீட்டிற்குச் செல்லும் வழக்கமுடைய ஒருவர் ஒரு முறைச் சென்ற போது கதவைத் திறந்த அவ்வீட்டுக் குழந்தை தனது தாயிடம் ஓடிச் சென்டறு 'ஒன்றுமே வாங்காமல் சும்மா வருமே அந்த மாமா வந்திருக்கிறது' என்று சப்தம் போட்டுச் சொல்ல, வந்தவர் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போயிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இரண்டு நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் நாமும் சேர்ந்துக் கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டால், நமது வருகையை அவ்விருவரும் அறிந்துக் கொள்ளும் விதத்தில் அறிவித்து விட்டு அவர்களுடன் இணைந்துக் கொள்ளவேண்டும். நமக்குத் தெரிவிக்க விரும்பாத இரகசியம் எதுவும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். அது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்த தலைப்பை விட்டு வேறு தலைப்புக்கு அவர்கள் திடீரென மாறினால், அதைக் கொண்டு நாம் புரிந்துக் கொள்ளலாம். பிறகு சந்திப்பதாகச் சொல்லி விட்டு நாம் நாகரிகமாக நகர்ந்துக் கொள்வது தான் இங்கிதம்.
பலர் சேர்ந்து இருக்கும் இடத்தில் ஒருவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பேசுவதும், மற்றவர்களுக்குப் புரியாத மொழியில் ஒருவருடன் உரையாடுவதும் முறையற்ற செயல்.
பலருடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது நாம் அவசரமாகச் செல்ல நேரிட்டால், மற்றவர்களிடம் நமது அவசரத்தை அறிவித்து விட்டுத் தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.
நம்மால் செய்ய இயலாத ஒரு காரியத்தில் நமக்கு உதவும் நோக்கத்துடன் ஒருவர் வந்து உதவி செய்தால் முழு வேலையையும் அவர் தலையில் கட்டி விட்டு நாம் ஒதுங்கி விடக் கூடாது. அவருடன் கூடவே இருந்து சின்னஞ்சிறு ஒத்தாசைகளை செய்ய வேண்டும். அதுபோல் அவருடைய காரியங்களில் நம்மால் இயன்ற வரை நமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பிறருக்கு நாம் உதவி செய்யும் போது அது பிரதி பலன் எதிர்பாராத உதவியாக இருக்க வேண்டும். அதே சமயம் பிறர் நமக்காக உதவி செய்தால் நம்மால் இயன்ற பிரதி பலனை நாம் செலுத்த வேண்டும்.
நமக்காக ஒருவர் செலவு செய்தால் அதற்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ பிரிதொரு சமயத்தில் அவருக்காக நாம் செலவு செய்ய வேண்டும். அதை உடனுக்குடன் செய்தால் நாகரிகமாக இருக்காது. எனவே அதற்கான தருணத்தை எதிர் பார்த்து காத்திருக்க வேண்டும்.
நண்பர்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் மிகவும் நேர்மையாகவும் நாணயத்துடனும் நடந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நட்பும் உறவும் நீடிக்கும். மிகச் சாதாரணமாக நாம் நினைக்கும் சின்னஞ்சிறு கொடுக்கல் வாங்கல்கள் தான் நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை பிறர் மனதில் பதிய வைக்கும்.
'ஒருவரை நல்லவர் என்று சொல்வதற்கு நீர் அவருடன் மூன்று விஷங்களில் சம்பந்தப் பட்டிருக்க வேண்டும். நீர் அவருடயை அண்டை வீட்டுக்காராக இருக்க வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் நடத்தியிருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.
பலர் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது பிறர் முகம் சுளிக்கும் படியான காரியங்களைச் செய்யக் கூடாது. தும்முதல் கொட்டாவி விடுதல் போன்ற இயற்கையான, நம்மால் கட்டுப் படுத்த முடியாத செயல்கள் ஏற்படும் போது பிறர் அருவருப்பு அடையாத வகையில் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள வேண்டும்.
நமது மிக நெருங்கிய நண்பராக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவருடன் மிகவும் இயல்பாகப் பேசும் பழக்கம் நமக்கு இருந்தாலும் கூட அவரை உயர்வாக மதிப்பவர்களிடம் குறிப்பாக அவரது மனைவி, குழந்தைகள், மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரிடம் அவரைப் பற்றி விசாரிக்கும் போது கண்ணியமான வார்த்தைகளைப் பயன் படுத்த வேண்டும்.
சிறு குழந்தைகள் செய்யும் சின்னஞ்சிறு செயல்களைக் கூட நாம் அங்கீகரித்து அவர்களைப் பாராட்ட வேண்டும். குழந்தை தவழ்வதற்கும், எழுந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் தன் முதல் முயற்சியைத் தொடங்கும் போது, அவர்களுக்குப் புரியும் விதத்தில் அவர்களுடைய மொழியாகிய புன்னகை மொழியில் நம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.
படிக்கும் குழந்தைகள் அனைவரும் அறிவாற்றலிலும், நினைவாற்றலிலும் சமமாக இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளில் ஆற்றலில் ஒருவருக் கொருவர் வித்தியாசப் படுவதுண்டு. நன்றாகப் படிக்கும் குழந்தைகளைப் பாராட்டும் அதே சமயம், குறைவான மதிப் பெரும் குழந்தையை மற்ற குழந்தைகளுக்கு முன்னால் வைத்து மட்டம் தட்டக் கூடாது. தனிப்பட்ட முறையில் அக் குழந்தையின் படிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.இந்த ஆலோசனைகள் பெற்றோர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருக்கும் போது ஒரு குழந்தைக்கு மட்டும் தனியாக எதுவும் வாங்கிக் கொடுப்பதோ, அதிக சலுகைகள் கொடுப்பதோ கூடாது. அது மற்ற குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
தொலை தூரத்தில் இருப்பவர்கள் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது, தவிர்க்கவே முடியாத அவசியம் ஏற்பட்டாலன்றி, அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு நேரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாது. சொந்தக் குடும்பத்தினருக்காயினும் சரியே. அகால நேரங்களில் ஒலிக்கும் தொலைபேசி ஒலி பலருடைய உறக்கத்தை கெடுப்பது மட்டுமல்ல, சிலருக்கு திடுக்கத்தையும் திகிலையும் ஏற்படுத்தும்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது முதலில் நாம் யாருடன் தொடர்புக் கொள்ள வேண்டுமோ அவர்தான் தொடர்பில் வந்திருக்கிறாரா? என்பதை நன்றாக உறுதிப்படுத்திக் கொண்டு தான் பேசத் தொடங்க வேண்டும். உரையாடலைத் தொடங்கும் போது அழகிய முகமன் கூறி, நலம் விசாரித்த பின்னர் தான் சொல்ல வந்த செய்திகளையோ கேட்க வந்த விபரங்களையோ தொடங்க வேண்டும்.
தொலைபேசியில் முடிந்தவரை சுருக்கமாகப் பேச வேண்டும். விரிவாகப் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது மறுமுனையில் இருப்பவரிடம் முன் கூட்டியே தெரிவித்து அவர் அதற்கேற்ற சூழ்நிலையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்துக் கொண்டு நமது உரையாடலைத் தொடரலாம். பேசிக் கொண்டிருக்கும் போது மறுமுனையில் இருப்பவர் நமது பேச்சில் கவனம் செலுத்தாமல் 'சரி வேறு எதுவும் செய்தி உண்டா?' என்று கேட்க ஆரம்பித்து விட்டாலே, அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்டு நமது பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொலைத் தொடர்பு கோளாறு காரணமாகத் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப் பட்டுவிட்டால் மறுபடியும் தொடர்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தபின் உரையாடலைத் தொடரவேண்டும்.
மரணம் போன்ற துக்கம் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்றால், அங்கு அமர்ந்துக் கொண்டு ஊர்க் கதைகள் பேசுவதும், சிரித்துப் பேசி குதூகலிப்பதும் கூடாது. மரண துக்கத்தில் இருப்பவர்களின் மன வேதனையைப் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் நம்மைப் பற்றியும் நமது குடும்பத்தைப் பற்றியும் சுய புராணம் பாடிக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
பலருடன் சேர்ந்திருக்கும் போது நாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்கள் பேசவும் வாய்ப்பளிக்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதையும் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கும் நம் பேச்சைக் கேட்பதற்கு ஆர்வம் பிறக்கும்.
பிரபலப் பேச்சாளர் வரும் வரை சிறிது நேரம் பொது மேடைகளில் பேச வாய்ப்பு கிடைத்தால், சுருக்கமாகப் பேச வேண்டும். எவ்வளவு தான் நாம் அருமையாகப் பேசினாலும் பிரபலப் பேச்சாளரின் உரைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நமது பேச்சு 'அறுவையாக'த் தான் தெரியும். இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேசமாட்டாரா? என மற்றவர்கள் எதிர்பார்க்கும் போது நம் உரையை முடித்துக் கொள்ள வேண்டும்.
இங்கிதத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இதுவும் ஓர் இங்கிதமே!
------------------------------------


அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

கடன் கிடைக்கும்

என்னும் தலைப்பைப் பார்த்தவுடன் மிகவும் ஆர்வமாகப் படிக்க ஆரம்பிப்பவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் அவசியம் இந்தக் கட்டுரையை படிக்கத்தான் வேண்டும்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் பிறருக்குக் கடன் பட்டிருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாலும் தீராத கடன், பத்து மாதம் சுமந்து, படாத பாடுபட்டு நம்மைப் பெற்றெடுத்த நம் தாயிடம் நாம் பட்ட கடன். கண்ணை இமை காப்பது போல் மழலைப் பருவத்தில் காத்து வளர்த்து நம்மை அவர் ஆளாக்கிய கடன். குடும்பத்தைக் காப்பாற்ற, குழந்தைகளை வளர்க்கப் பாடுபட்டு உழைத்த தந்தையின் கடன்.இது போக அறிவைப் புகட்டிய ஆசிரியர் கடன், உள்ளத்தில் இடம் பெற்ற உடன் பிறந்தோர் கடன், நம்மையே நாடி வந்து நமக்காகத் தம்மையே அர்ப்பணித்த மனைவியின் கடன், நல்லொழுக்கத்தாலும், நன்னடத்தையாலும், நானிலம் போற்ற வாழ்ந்து பெற்றோருக்குப் பெருமை சேர்த்த பிள்ளைகள் கடன், ஆபத்து சமயங்களில் உதவி அனைத்து நேரங்களிலும் ஆறுதலாக இருந்த நண்பர்கள் கடன், இப்படி இந்தக் கடன் பட்டியல் நீண்டுக் கொண்டே போனாலும், இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவருக் கொருவர் உதவும் பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலின் போது ஏற்படும் கடனைப் பற்றி.

நாட்டை வளப்படுத்த அரசாங்கமே கடன் வாங்குகிறது. பெரும் தொழிலதிபர்களான செல்வந்தர்கள் கூடத் தம் தொழிலை விரிவு படுத்தக் கடன் வாங்குகின்றனர். அப்படியிருக்க தனி மனிதன் தம் தேவைகளுக்காகக் கடன் வாங்குவது தவறில்லை.வட்டியை அடிப்படையாகக் கொண்ட கடனை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் ஒருவருக் கொருவர் கடன் பெறுவதையும் தருவதையும் இஸ்லாம் தடை செய்ய வில்லை. கடன் கொடுக்கல் வாங்கலின் போது முறையாக எழுதி வைத்துக் கொள்ளும்படியும், தகுந்த சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளும்படியும் திருமறை குர்ஆனின் 2:282 வசனம் எடுத்தியம்புகிறது.

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தம் கேடயத்தை அடமானம் வைத்துக் கோதுமையைக் கடனாகப் பெற்றதாக ஆதாரப்பூர்வமான நபி மொழி நமக்கு அறிவிக்கிறது.
பரஸ்பரம் ஒருவருக் கொருவர் கடன் கொடுத்து உதவுவது அன்பை அதிகப் படுத்தும். கடன் வாங்குவது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் அடுத்தவருக்குத் தேவைப் படும்போது கொடுத்து உதவவும் மனம் வரவேண்டும். அப்போது தான் நமக்குத் தேவை ஏற்படும் போது பிறரிடம் கேட்கவும் முடியும்.

'கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்காதே! 'தேவைப்படுகிறது' என்பதற்காக வாங்கு' என்பது ஓர் அறிஞரின் கூற்று. ஆம்! ஒருவர் நம்மிடம் 'பணம் தேவைப்பட்டால் கேளுங்கள்' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனேயே அவரிடம் 'சரி தாருங்கள்' எனக் கேட்கக் கூடாது. உண்மையிலேயே நமக்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும்.

நமக்குக் கடன் கொடுத்து உதவ பலர் தயாராக இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் நாம் நற்பெயர் எடுத்திருக்கிறோம் என்று பொருள்.அந்த நற்பெயரை முடிந்த வரைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். இது வரை வாங்கிய கடன்களை ஒழுங்காக நாம் திருப்பிச் செலுத்தியிருந்தால் மட்டுமே இப்படி ஒரு நற்பெயர் நமக்குக் கிடைக்கும். இந்த நற்சான்றிதழுக்கு நாம் தகுதியானவர் தானா என்பதை, கடந்த காலங்களில் நாம் வாங்கிய கடனை முறையாக உரிய நேரத்தில் ஒழுங்காக நாம் திருப்பிக் கொடுத்திருக்கிறோமா என்பதை வைத்து நாம் தான் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.

'இவர் மிகவும் நல்லவர், ஆனால் கடன் வாங்கினால் மட்டும் சீக்கிரம் தரமாட்டார்' என்று ஒருவரைப் பற்றி சிலர் கூறுவதுண்டு. இந்த விமர்சனம் அர்த்தமற்றது. இது அவரைப் பற்றிய புகழ்ச்சியா? அல்லது இகழ்ச்சியா? என்பது புரியவில்லை. வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பித் தராதவர் எப்படி நல்லவராக இருக்க முடியும்?

கடன் வாங்கிய ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருப்பித் தர இயலாமற் போவதுண்டு. ஆனால் அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட நபர் இப்படி விமர்சிக்கப் படுவதில்லை. வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பித் தருவதில்லை என்பதை வாடிக்கையாகக் கொண்டவர் தான் இப்படி விமர்சிக்கப் படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

'ஒருவரை நல்லவர் என்று சொல்ல வேண்டுமானால், அவர் அண்டை வீட்டுக் காரராக இருக்க வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று மிகவும் சிந்திக்கத் தக்கதாகும். இந்த மூன்று நிலைகளிலும் ஒருவரின் சுயரூபம் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் வெளிப்பட்டு விடும்.

எதிர்பாராத ஒரு செலவு ஏற்படுகிறது. கையில் அறவே பணம் இல்லை. யாரிடமாவது கடன் வாங்கலாம். ஆனால் கடன் வாங்கி இதைச் செலவை செய்யத்தான் வேண்டுமா? என்று ஒன்றுக்குப் பலமுறை நன்றாகச் சிந்திக்க வேண்டும். தவிர்க்கவே முடியாது என்கிற சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே கடைசி ஆயுதமாகக் கடனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை.

பொதுவாகவே சிக்கனமாகச் செலவு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை ஏற்படுவதில்லை. ஊதாரித்தனமான செலவுகளால் தான் பெரும்பாலானோர் கடனாளி ஆகின்றனர். தேவையற்ற செலவுகளைக் குறைத்தாலே கடன் இல்லாமல் வாழலாம். அபூர்வமாகத் தான் அவசிய செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். கடன் வாங்கி பிரியானி சாப்பிடுவதை விட கடன் வாங்காமல் கஞ்சி குடித்தாலும் அந்தப் பொழுது போய்விடும். கஞ்சி குடிப்பதற்கும் வழியில்லாத போது கடன் வாங்குவது குற்றமில்லை.

ஒருவரிடம் கடன் கேட்கும் நிர்ப்பந்தம் ஏற்படும் போது நமது தேவையையும் நிலையையும் சொல்லி கடன் கேட்க வேண்டும். திருப்பித் தரும் காலக் கெடுவையும் சொல்ல வேண்டும். சொன்ன காலக் கெடுவுக்குள் கடனை திருப்பிக் கொடுக்கவும் வேண்டும்.

நமக்குக் கடன் கொடுத்தவருக்கு எதிர்பாராத அவசரத் தேவை ஏற்பட்டு அவர் சிரமப் படுகிறார் என்பது நமக்குத் தெரிய வந்தால், எந்த வகையிலாவது ஒரு மாற்று ஏற்பாடு செய்து, அவர் கேட்பதற்கு முன்பே, அவரிடம் நாம் வாங்கிய கடனை தவணைக்கு முன்னரே கொடுக்க முயற்சிக்க வேண்டும். நாம் சொன்ன கெடு தான் இன்னும் இருக்கிறதே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர் நிலைமையை உணர்ந்து கெடுவுக்கு முன்னரே திருப்பிக் கொடுப்பது, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.

வாங்கிய கடனை சந்தர்ப்ப சூழ்நிலையால் குறிப்பிட்ட காலத் தவணையில் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டு விடுமானால், கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து நமது இயலாமையை எடுத்துச் சொல்லி இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்கலாம். எக்காரணம் கொண்டும் சம்பந்தப் பட்டவரை சந்திப்பதைத் தவிர்த்து ஓடி ஒளியக்கூடாது. அது கடன் கொடுத்தவருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். நேரில் சந்தித்து ஆறுதலான வார்த்தைகள் சொன்னால் அவர் மனம் குளிரும். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கிடைக்கும். இடைப்பட்ட காலத்திலாவது எப்படியும் கடனைத் திருப்பிக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.மனம் குளிரப் பேசி மேலும் மேலும் தவணை கேட்பதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.

சிலர் கடன் வாங்கும் போது இனிக்க இனிக்கப் பேசுவார்கள். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு வரும். கொடுத்த கடனைக் கேட்டால் கோபப்படுகிறவர்கள் மனித இனத்தின் நச்சுப் பாம்புகள். 'கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை' என்று முன்னோர்கள் சரியாகத் தான் சொன்னார்கள்.
ஒருவர் பணம் வைத்திருப்பது நமக்குத் தெரியும், நமக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியும் என்றால் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அவரிடம் கடன் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் அவரிடம் கேட்டு அவர் 'இல்லை' என்று சொன்னால் அதற்காக அவர் மீது வருத்தப்படக் கூடாது. அவருக்கு வேறு ஏதேனும் செலவுகள் இருக்கலாம் அல்லது நமக்கு கடன் கொடுத்தால் ஒழுங்காகத் திருப்பிக் கிடைக்காது என அவர் கருதியிருக்கலாம். அவருடன் ஏற்கனவே நாம் கொடுக்கல் வாங்கல் செய்த போது நாம் நாணயத்துடன் நடந்துக் கொண்டோமா என்பதை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும்.

சிலரிடம் கொடுத்த கடனைக் கேட்டால், கேட்கும் போதெல்லாம் 'ஆம்! நான் உங்களுக்குத் தரவேண்டும் என்பது உண்மை தான், இல்லை என்று சொல்ல வில்லை, ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லையே! கிடைக்கட்டும் தருகிறேன்' என்று வாரக் கணக்கில் மாதக் கணக்கில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 'தரமுடியாது' என்று சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மாதக் கணக்கில் அவர்களிடம் பணம் வராமலா இருக்கிறது? அவர்கள் செலவு செய்யாமலா இருக்கிறார்கள்? அவர்களுடைய வழக்கமான ஆடம்பரச் செலவுகள் படு ஜோராய் நடந்துக் கொண்டு தானிருக்கும். வாங்கிய கடனைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்கள் இதயத்தில் தோன்றுவதே இல்லை.

கை நீட்டிக் கடன் வாங்கி விட்டால் திருப்பிக் கொடுக்கும் வரை, கடன் கொடுத்தவரைக் கண்டால் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போகிறவர்களும் உண்டு. இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் வாங்குகிறார்களே தவிர விரும்பி வாங்குகிறவர்கள் அல்ல. இப்படிப் பட்டவர்களை பேச்சிலும் நடத்தையிலும் அடையாளம் காண முடியும். இப்படிப் பட்டவர்களுக்குக் கடன் கொடுக்கலாம்.
மாதச் சம்பளம் பெறுவோர் சிலர் சம்பளம் வாங்கிய மறு நாளிலிருந்தே கடன் வாங்க ஆரம்பித்து விடுவார்கள். கடைக் காரர்களுக்கு வாடிக்கை யாளர்களைப் போல், கடன் வாங்குவதில் இவர்கள் வாடிக்கையாளர்கள். சம்பளம் வாங்கும் போது சரியாகத் திருப்பிக் கொடுத்தாலும், மறுபடியும் மறுபடியும் மாதாமாதம் கடன் வாங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு மாதம் மட்டும் தங்கள் செலவினங்களை மட்டுப்படுத்திக் கொண்டால் அடுத்த மாதம் முதல் கடன் வாங்காமல் தங்கள் சம்பளத்திலேயே காலம் கழிக்கலாம். அந்த அளவுக் கெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. வாங்கும் சம்பளத்திற்கேற்ப இவர்களிடம் சரியானத் திட்டமிடுதல் இல்லை. வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த மாத சம்பளம் வரை அன்றாடச் செலவினங்களுக்கு ஒதுக்கிக் கொண்டால், அநாவசியமாக அடுத்தவரிடம் கடன் கேட்டுக் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்படாது. எதிர்பாராமல் ஏற்படும் அவசரத் தேவைகளுக்கு மட்டும் கடன் வாங்கிக் கொள்ளலாம். இப்படித் திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அப்படிப்பட்ட 'எதிர்பாராதச்' செலவுகள் அபூர்வமாகவே ஏற்படும்.

கடைகளில் கணக்கு வைத்து காலமெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் பல வகைகளிலும் நஷ்டப்படுகிறார்கள் என்பதை அவர்கள் பெரும்பாலும் உணருவதில்லை. பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் போது பல இடங்களிலும் விசாரித்து, குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும். கடனுக்கு வாங்கும்போது விலை எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க முடியாது.பணம் கொடுத்து பொருள் வாங்கும்போது தரமான பொருளைத் தேடிப்பார்த்து வாங்கலாம். கடனுக்கு வாங்கும்போது கிடைப்பதைத் தான் வாங்க வேண்டும். பணம் கொடுத்து பொருள் வாங்குபவர்களுக்குத் தான் முன்னுரிமை கிடைக்கும்.
கடனுக்கு வாங்குபவர்கள் தன்மானத்தைக் கூட சில சமயம் இழக்க வேண்டிவரும்.கடன் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்காத போது கடன் கொடுத்தவர் சில சமயம் கோபத்தில் ஏதாவது பேசி விடக் கூடும். இச்சமயத்தில் கடன் வாங்கியவர் பொறுமையைத் தான் கடைப் பிடிக்க வேண்டும். உரிய நேரத்தில் திருப்பிக் கொடுத்திருந்தால் அவர் தவறாகப் பேசியிருக்கமாட்டார் என்பதை உணர வேண்டும். நமது தேவைக்குக் கடன் கொடுத்து ஆபத்தான நேரத்தில் உதவிய அவரது நல்ல குணத்தை மட்டுமே நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நாம் ஒருவருக்குக் கடன் கொடுத்து, உண்மையிலேயே அவரால் உரிய நேரத்தில் திருப்பித் தரஇயலாத சூழ்நிலை இருப்பது நமக்குத் தெரியவந்தால், இயன்றவரை தவணையை நீட்டிப்பதும், அவர் தரும் வரை பொறுமை காப்பதும், மிகவும் நன்மையான காரியங்களாகும்.

கடன் வாங்குவதை இயன்றவரைத் தவிர்க்க வேண்டும். இயலாதபோது மட்டுமே கடன் வாங்க வேண்டும். இயன்றவரைக் குறைவாக வாங்க வேண்டும். அதையும் தவிர்க்க முடியுமானால் அதுவே சிறந்தது.

கடன் பட்டோனாய்க் காலையிலே
கண் விழிப்பதினும் மேலாகும்
உடன் பட்டிரவுப் பசியுடனே
உறங்கச் செல்லல் பொன் மொழியாம்

என்று கவிஞர் அப்துல் கபூர் அழகாகச் சொல்வார்.

கடனாளியாக ஒருவர் மரணித்தால் அவருடைய சொத்துக்களிலிருந்து முதலில் அவருடைய கடன்களை அடைத்த பிறகு தான் எஞ்சிய சொத்துக்களை வாரிசுகள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று இறைவனின் திருமறை எடுத்தியம்புகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இறந்தவர்களின் உடல் ஜனாஸா தொழவைப்பதற்காகக் கொண்டு வரப்படும் போது 'இறந்த இவருக்கு கடன்கள் இருக்கின்றனவா? என்றும் அப்படி கடன்கள் இருந்தால் கடன்களை அடைக்கும் அளவுக்கு சொத்துக்கள் எதுவும் இவர் விட்டுச் சென்றுள்ளாரா? என்றும் விசாரித்து அப்படி இருந்தால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்துவார்கள், இல்லை யென்றால் 'உங்கள் சகோதரருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றும் கூறிவிடுவார்கள்.

மரணம் எந்த நேரமும் யாருக்கும் ஏற்படலாம். வாங்கிய கடனைப் பற்றி வாரிசு தாரர்களிடம் 'வஸிய்யத்' (மரண உபதேசம்) செய்து வைக்க வேண்டும். வாங்கிய கடன்களையும், கொடுத்த கடன்களையும் எழுதி வைத்துக் கொள்வதை வழக்காகக் கொள்ள வேண்டும். கடனாளியாக இறப்பதை விட்டும் பாதுகாக்கும்படி அடிக்கடி இறைவனிடம் பிரார்த்திக் வேண்டும்.

இயன்றவரை கடன் வாங்காதவர்களாக, இயலாத சூழ்நிiயில் வாங்க நேர்ந்து விட்டால் முறையாகத் திருப்பிக் கொடுப்பவர்களாக, அடுத்தவர்களுக்கு அவசரத் தேவைகள் ஏற்படும்போது கொடுத்து உதவுபவர்களாக, கடன் பெற்றவர் திருப்பித்தர இயலாத சிரமத்தில் இருப்பது தெரியவந்தால் இயன்றவரை பொறுமை காப்பவர்களாக, கடன் வாங்கியவர் இறந்து போய்விட்டால், அவரின் வாரிசுதாரர்கள் தரமுடியாத வறுமையில் இருக்கும் போது மனப்பூர்வமாக மன்னிப்பவர்களாக, இறைவன் நம்மை ஆக்கிவைக்க பிரார்த்திப்போமாக. அதற்கேற்ற வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக.

அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

இனிய இஸ்லாதிற்காக

தமிழ் இணைய உலகில் இஸ்லாத்திற்காக இனிய சேவையாற்ற இன்னொரு வலைப்பதிவின் மூலம் தமிழ் இதயங்களைச் சந்திப்பதில் பேருவகை கொள்கிறோம்.
அன்புடன்
நல்லூர் பீர்

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text