அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)
நான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவிலக் கேட்டேன்: ""இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி: கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை(இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவம் தெளிவாகி விடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்றுமுறை கூறினார்கள். பிறகு ""அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்த வண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமைநாளில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்'' என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
""எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன்
பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமைநாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (கருணைப் பார்வை பார்க்க மாட்டான்)''
அபூபக்கர் ஸித்தீக்(ரலி) அவர்கள் வினவினார்கள்:
""நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனோ?)'' அதற்கு அண்ணலார், ""இல்லை; நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். (எனவே, இறைவனின் அருட்பார்வையை நீர் இழக்க மாட்டீர்)'' என்று பதிலளித்தார்கள்.
(புகாரி)
விளக்கம்: அபூபக்கர் ஸித்தீக்(ரலி) அவர்கள் வேட்டி தளர்ந்து போனதற்கு காரணம் அவர்களுக்குத் தொப்பை போட்டிருந்தது என்பதன்று. மாறாக அவர்கள் ஒல்லியாக இருந்தது தான் இதற்குக் காரணம். ""கர்வத்தினாலும் பெருமையுணர்வினாலும் கணுக்கால்களை மறைக்கும் வண்ணம் வேட்டியணிந்து நடப்பவனே இறைவனின் கருணைப்பார்வையை இழந்து விடுவான்'' என்றுதான் அண்ணலார் நவின்றார்கள். இந்த அருள்மொழி முழுவதையும் அபூபக்கர்(ரலி) அவர்கள் செவியுற்றார்கள். தற்பெருமையினால் வேண்டுமென்றே தாம் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். ஆயினும், ஒரு மனிதனை மறுமை பற்றிய கவலை கவ்விக் கொள்ளும்போது, பாவத்தின் நிழல்களைக் கண்டாலும் கூட அவற்றை விட்டு அவர் விலகி ஓடுகிறார்.
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 Response to "ஆடை விஷயத்தில் கவனம்"
கருத்துரையிடுக